பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (24) அதிகாலை 12.30 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கிஹான் துலான் பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, எட்டு பேருடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, முச்சக்கர வண்டியில் வந்த துப்பாக்கிதாரி , துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், இரு தரப்பினரும் சில ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அதிகாரி எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

