மட்டக்களப்பில் சொந்த வீட்டில் 16 பவுண் தங்க ஆபரணங்களை திருடிய இளைஞன் ; கடைமுதலாளி உட்பட 3 பேர் கைது

62 0

மட்டக்களப்பில் சொந்த வீட்டில் 16 பவுண் தங்க ஆபரணங்களை திருடிய  இளைஞனையும் அவரது நண்பனையும் திருட்டு தங்க ஆபரணத்தை வாங்கிய நகைகடை உரிமையாளர் ஒருவர் உட்பட 3 பேரை வெள்ளிக்கிழமை (21) கைது செய்துள்ளனர்.

இதுபற்றி தெரியவருவதாவது,

குறித்த பொலிஸ் பிரிவைச்சேர்ந்த 18 வயது இளைஞனின் தாய் தந்தை  இழந்த நிலையில் அவரை அவரது உறவினர்கள் தமது வீட்டில் வைத்து ஆதரித்து படிக்க வைத்து பராமரித்து வந்தனர்..

இந்நிலையில் தமது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் திருட்டுப் போயுள்ளதையடுத்து, பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்ததன்  பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த இளைஞன் திருடியுள்ளதைக் கண்டறிந்தனர்.

இதனையடுத்து சம்பவ தினமான வெள்ளிக்கிழமை  குறித்த இளைஞனையும் அவரது நண்பனையும் மற்றும்  திருடிய தங்க ஆபரணத்தை சட்டவிரோதமாக வாங்கிய  காத்தான்குடி பகுதியிலுள்ள தங்க ஆபரண விற்பனை நிலைய உரிமையாளர் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

குறித்த இளைஞன் வீட்டில் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 16 பவுண்கள் கொண்ட 8 தங்க வளையல்களை திருடி எடுத்துக் கொண்டு சென்று நண்பனுடன் சேர்ந்து அதனை காத்தான்குடி பிரதேசத்திலுள்ள  நகைக்கடை ஒன்றில் கொண்டு சென்று விற்று பணத்தை எடுத்துக் கொண்டு அதில் 6 இலட்சம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றையும்,  கையடக்க தொலைபேசி ஒன்றையும் வாங்கியதுடன் ஏனைய பணத்தில் உடைகள் வாங்கியதுடன்,  உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட 3 வரையும்  வெள்ளிக்கிழமை  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து 3 பேரையும் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.