பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை கடத்திய குற்றச்சாட்டில் 5 இந்தியர்களை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் ஆட்கத்தலில் ஈடுபடும் கும்பலைக் குறிவைத்து அமெரிக்கப் பொலிஸார் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
ஒமாஹா மெட்ரோ பகுதிகளில் உள்ள விடுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில், 12 வயதிற்குட்பட்ட 10 பேர், 17 ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 27 பேரைக் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அனைவரும் கடத்தப்பட்டு விடுதி பணிக்காக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
நீண்ட நேர வேலை, குறைவான ஊதியம், சிலருக்கு ஊதியமே வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும், சில பெண்களையும் சிறுமிகளையும் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த சோதனையின்போது, பாதிக்கப்பட்டவர்கள் அசுத்தமான இடத்தில் பூச்சிகள் ஊர்ந்து செல்வதற்கு மத்தியில், தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த காட்சிகளைக் கண்டதாக பொலிஸார் நீதிமன்றத்தில் விவரித்தனர்.
குறித்த விடுதிகளை நடத்திவந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் 5 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது ஆட்கடத்தல், பெண்களை கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், விசா மோசடி, கொள்ளை, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களிடமிருந்து 5.65 இலட்சம் அமெரிக்க டொலர்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், விடுதிகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான சொத்துகள் அனைத்தையும் அமெரிக்க பொலிஸார் முடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

