வடக்கு கிழக்கில் ஹர்த்தாலை ஏற்படுத்தியதன் மூலம் அரசாங்கத்தின் பலமும் அரசாங்கத்திற்கு தமிழ் ,முஸ்லிம் மக்களிடையில் உள்ள பாரிய ஆதரவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக இதனை ஏற்பாடு செய்த தமிழரசுக்கட்சிக்கு நன்றி கூறுகின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எம்.கே.எம். அஸ்லம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வடக்கு, கிழக்கில் நடைபெற்ற ஹர்த்தால் போராட்டத்தை தமிழ் சமூகம் தோல்வியடைய செய்துள்ளது. யாழில் ஹர்த்தால் தோல்வியடைந்ததால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வவுனியாவுக்கு சென்று மூக்கை உடைத்துக்கொண்டு வந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் சிறீதரன் எம்.பி முற்பகல் 10 மணியளவிலேயே அந்த போராட்டத்தை முடிவுறுத்தியுள்ளார்.
ஹர்த்தால் விடயத்தில் யாழ். மாநகர சபை முதல்வரும் மட்டக்களப்பு மாநாகர சபை முதல்வரும் நடந்து கொண்ட முறை கேவலமானதாக இருந்தது. இவர்கள் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததை காணக்கூடியதாக இருந்தது. தமது அதிகார பிரதேசங்களில் கடைகளை மூடுமாறு பலவந்தமாக கூறினர். சிலர் அச்சத்தில் கடைகளை மூடிய நிலைமை காணப்பட்டது. அதேபோன்று முஸ்லிம் காங்கிரஸ் இதற்கு ஆதவளிப்பதாக கூறியிருந்தது. ஏன் இவ்வாறு கூறினர் என்று தெரியவில்லை.
அதேபோன்று மனோகணேசன் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோரும் அவ்வாறு ஆதரவளிப்பதாக கூறியிருந்தனர். இந்த ஹர்த்தால் புனிதமான நோக்கத்துடன், இலங்கையில் மக்களுக்கு நடந்த பாரிய அநியாயத்திற்கு எதிரானவொன்றாக செய்யப்பட்டது என்று இவர்கள் நினைக்கின்றார்களா? மக்கள் மிகத் தெளிவாக, புத்தியுடன் செயற்பட்டு தமிழரசுக் கட்சியையும், முஸ்லிம் காங்கிரஸையும் புறக்கணித்துள்ளனர். இந்த ஹர்த்தால் என்ன நோக்கத்திற்கானது?தமிழரசுக் கட்சி தமது அரசியல் நோக்கத்திற்காக இந்த போராட்டத்தை திட்டமிட்டது .
இந்த அரசாங்கம் இனவாதத்தை எதிர்க்கின்றது. இனவாதத்தை தலைதூக்க இடமளிக்க மாட்டோம் என்று அரசாங்கம் உறுதியாக கூறுகின்றது. நாங்கள் மிகத் தூய்மையாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அரசியல் செய்கின்றோம். இதனால் இந்த ஹர்த்தால் ஏனைய சமுகத்தினருக்கும். ஏனைய பிரதேசங்களுக்கும் நல்ல முன்னுதாரணமாக இருக்கும்.
தேசிய மக்கள் சக்தி மஹிந்த ராஜபக்ஷ்வின் கட்சியை போன்றது என்று சுமந்திரன் கூறுகின்றார். ஆனால் இலங்கை தமிழரசுக் கட்சி அன்று பிள்ளையான் மற்றும் கருணா அம்மான் ஆகியோர் முன்னெடுத்த செயற்பாடுகளில் இறங்கியுள்ளதாகவே பார்க்கின்றோம். அவர்களுக்கு தேவையென்றால் கடையடைப்பை செய்யுமாறு கூறுவார்கள். ஹர்தாலுக்கு செல்ல காரணமான சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஏன் இந்த அரசியல் நாடகம்?
இலங்கை தமிழரசுக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் என்பன இருப்பை இழந்து வருகின்றன. ரிஷாத் தலைமையிலான கட்சி இதனை ஆதரிக்கவில்லை. அரசாங்கம் மக்களுடன் இருக்கின்றது. மக்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர். அரசாங்கத்தின் பலமும் அரசாங்கத்திற்கு தமிழ், முஸ்லிம் மக்களிடையில் இருக்கின்ற பாரிய ஆதரவும் இந்த ஹர்த்தால் மூலம் வெளிப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை ஏற்படுத்திய ஹர்த்தாலை ஏற்பாடு செய்த தமிழரசுக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு நன்றிகளை கூறுகின்றோம் என்றார்.

