வடக்கில் எங்கு பார்த்தாலும் இராணுவ முகாமை அவதானிக்கும் நிலையில் தெற்கின் நிலமை வேறு விதமாக உள்ளது. எனவே அதிகப்படியான இராணுவப்பிரசன்னத்தை குறைக்க வலியுறுத்தி எதிர்வரும் கர்த்தால் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
எதிர்வரும் திங்கட்கிழமை (18) இடம்பெறவுள்ள கர்த்தால் போராட்டத்திற்கு நாம் முழுமையான ஆதரவினை வழங்குகின்றோம். நாட்டில் உள்ள ஏனைய ஏழு மாகாணங்களை விட வடகிழக்கில் இராணுவ பிரசன்னம் அதிகமாக இருக்கிறது.
எனவே வடகிழக்கில் உள்ள இராணுவத்தை குறைத்து அனைத்து மாகாணங்களுக்கும் சமமான அளவில் பங்கிடப்பட வேண்டும். எமது மக்களின் காணிகளை இராணுவம் விடுவிக்க வேண்டும்.
தற்போதுகூட வவுனியா விமானப்படை முகாமுக்காக சகாயமாதா புரத்திற்கு பின்புறமுள்ள 8 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படவுள்ளது. ஆனால் அந்த கிராமத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றுகூட இல்லை.
இறம்பைக்குளம் கிராமத்தில் பொதுத்தேவைக்கான காணி இல்லை. அந்தபகுதியில் உள்ள மயானத்திற்கான நிலம் போதுமானதாக இல்லை.
எனவே இப்படியான ஒரு நிலை இருக்கும் போது இந்த காணி சுவீகரிப்பை எப்படி அனுமதிக்க முடியும். எமது பகுதிகளில் கிராமங்களுக்கு ஒரு இராணுவ முகாம் ஒன்று கட்டாயம் இருக்கும் நிலை உள்ளது.
ஆனால் தெற்கில் அவ்வாறு இல்லை. எனவே இவ்வாறான நிலமைகள் மாற்றப்படவேண்டும் என வலியுறும்தி நாம் இந்த கர்த்தாலுக்கு முழுமையான ஆதரவினை வழங்குகின்றோம் என்றார்.

