அமைச்சர் பிமல் ரத்நாயக்க நானுஓயா புகையிரத நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்

95 0

நுவரெலியாவிற்கு வருகை தந்த  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க  வியாழக்கிழமை (14) பிற்பகல் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன் போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி, உயர் கல்வி பிரதி அமைச்சருமான மதுர செனவிரத்ன மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி உட்பட நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த அரச அதிகாரிகள் போது உடனிருந்தனர்.

குறிப்பாக நானுஓயா புகையிரத நிலைய பகுதியினை பார்வையிட்ட அமைச்சர், புகையிரத நிலைய பிரதான அதிபர் உட்பட புகையிரத நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, மேற்கொள்ளப்பட வேண்டிய, திருத்தப் பணிகள் தொடர்பில் ஆராய்ந்தார் மேலும் அங்குள்ள குறை நிறைகளை பார்வையிட்டு கலந்துரையாடியுள்ளார்.

இதில் தற்போது புகையிரத நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நவீன மயப்படுத்தும் செயற்பாடுகள் குறித்தும் வேலைத்திட்டங்கள் குறித்தும்  அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அத்துடன் நுவரெலியா வருகை தரும் சுற்றுலா பயணிகள் தொடருந்து நிலையத்தில்  எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தி  கலந்துரையாடினார்.

இதன் போது நானுஓயா புகையிரத நிலைய பிரதான அதிபர் உட்பட புகையிரத நிலைய அதிகாரிகள் இணைந்து  தற்போது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் நுவரெலியாவிற்கு வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பிரதான தொடருந்து நிலையம் நானுஓயாவில் உள்ளதால், நானுஓயாவிலிருந்து பதுளை செல்லும் ரயில்களுக்கு மேலதிகமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் தொடருந்து பெட்டிகளாக புனரமைக்கப்பட்டு இணைக்க வேண்டும் என  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தனர்.

மேலும், புகையிரத நிலையத்தில் காணப்படும் பணியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும், நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரயிலில் வருகை தரும் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் வாகன சாரதிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும்  அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.