2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு பெரும்போக விவசாயத்தில் நெல், சோளம், பெரிய வெங்காயம், மிளகாய்,சோயா, உருளைக்கிழங்கு ஆகிய பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இந்த ஆண்டு 1484 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.
கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
விவசாயிகள் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்தும் நோக்கில் இலவசமாக இந்த பயிர்ச்செய்கை காப்புறுதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், சோயா உள்ளிட்ட பயிர்ச்செய்கைகள் 87690 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட 74958 விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க 1484 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
வறட்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் காட்டு யானைகளினால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இந்த நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் நில பயிர்ச்செய்கைக்கு குறைந்தபட்சம் ஒரு இலட்சம் ரூபாய் வரையில் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

