மன்னார் கடற்கரையில் ஒதுங்கும் பிளாஸ்டிக் தூவல்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்

68 0

 

கேரள கடற்பரப்பில் பிளாஸ்டிக் தூவல்களை ஏற்றிச்சென்ற கப்பல் கடந்த மே மாதம் 25ஆம் திகதி கடலில் மூழ்கியதையடுத்து, அந்த கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் தூவல்கள் தற்போது மன்னார் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி வருகிறது.

இந்நிலையில் கரை ஒதுங்கி தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் தூவல்களை அகற்றும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் திங்கட்கிழமை (28) மன்னார் சௌத்பார், கீரி, தாழ்வுப்பாடு கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் தூவல்களை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் தெரிவுசெய்யப்பட்ட மக்களை பயன்படுத்தி, அவர்களுக்கு குறிப்பிட்ட நாளாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடல் சூழலையும் கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடல்சார் பாதுகாப்பு சூழல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் மன்னார் தாழ்வுப்பாடு கடற்கரையில் இன்று காலை 11 மணிக்கு ஆரம்பமானது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், கடல்சார் பாதுகாப்பு சூழல் திணைக்கள பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.