நெடுந்தீவு கடற்பரப்பில் ஜூலை 13ம் திகதி கைது செய்யப்பட்ட 7 ராமேஸ்வரம் மீனவர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (25) உத்தரவு பிறப்பித்துள்ளது.
யாழ் ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஜூலை 13ம் திகதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகினையும் அதிலிருந்து 7 இந்திய மீனவர்களையும் கைது செய்திருந்தனர்.
பின்னர் குறித்த மீனவர்களையும், இழுவை படகினையும் கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
விசாரனைகளின் பின்னர் 7 தமிழகம் ராமேஸ்வரம் மீனவர்களையும் கடந்த 13ஆம் திகதி நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த மீனவர்களை ஜூலை 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், குறித்த மீனவர் வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 25 படகுகளுடன் 185 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

