மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வானது இன்றைய தினம் (25) தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர் லோகப்பிரகாசம் ரமணன் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துவிட்டு, சபையில் இருந்து வெளியேறினார். அதனையடுத்து சபையின் உப தவிசாளரும் வெளியேறினார்.
இதன்போது அவர் சபை அமர்வுக்கு முன்னர் கருத்து தெரிவிக்கையில்,
எமது இனமானது அளிக்கப்படுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜூலை கலவரம். இந்த ஜூலை கலவரத்தின்போது தான் தமிழர்கள் அவர்களது தாயகம் நோக்கி விரட்டியடிக்கப்பட்டார்கள். அதன் பின்னர் தான் எமது இளைஞர்கள் பலர் ஆயுதங்களை கையில் எடுத்தார்கள்.
செம்மணி புதைகுழியில் எமது பிஞ்சுக் குழந்தைகள் உட்பட இளைஞர்கள், யுவதிகள் என பலர் புதைக்கப்பட்டமைக்கு அடிப்படைக் காரணம் ஜூலை கலவரமே.
அரசு இயந்திரம் சரியாக செயற்பட மறுக்கிறது. எமது இளைஞர்கள், யுவதிகளுக்கு என்ன நடந்தது? 1983ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூலை கலவரத்திற்கு தீர்வு இதுவரை வழங்கப்பட்டதா? இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நான் இந்த சபையை விட்டு ஐந்து நிமிடங்கள் வெளிநடப்பு செய்கின்றேன்.
இந்த இன அழிப்பு நடைபெற்றது உண்மையே. இன்றும் அதற்கு தீர்வு வழங்கப்படவில்லை என கருதுபவர்கள் என்னுடன் இணைந்து ஐந்து நிமிடங்கள் வெளிநடப்பு செய்யுங்கள் என்றார்.
அவர் அவ்வாறு கூறிவிட்டு வெளியேறினார். அவருடன் இணைந்து உப தவிசாளரும் வெளியே சென்றார்.
இருப்பினும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளின் உறுப்பினர்களான இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஏனைய உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் எவரும் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறவில்லை.


