பெருந்தோட்டக் கம்பனிகளிடம் அரசாங்கம் அடிபணிந்துவிட்டதா? – இராதாகிருஸ்ணன்

74 0

தேர்தல் மேடைகளில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் அரசாங்கம் அவர்களுக்கான சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் உதாசீனப் போக்குடன் செயற்பட்டு வருகிறது. அவர்களை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அராசாங்கம் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு அடிபணிந்துவிட்டதா என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆகக் குறைந்த சம்பளம் தொடர்பில் அரசாங்கம் புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. ஆரம்பத்தில் 21 ஆயிரமாக காணப்பட்ட சம்பளம் தற்போது 27,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் அது 30,000 வரை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனையை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்.

எவ்வாறிருப்பினும் அந்த சந்தர்ப்பத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை நாம் முன்வைத்தோம். ஆனால் இதனை அரசாங்கம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலின்போதும் பொது தேர்தலின் போதும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போதும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என இந்த அரசாங்கம் பிரசாரங்களை முன்னெடுத்தது.

ஆனால் தேர்தல்களில் வெற்றி பெற்றதன் பின்னர் 1700 ரூபாய் சம்பளத்துக்கு இணக்கம் காணப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இருப்பினும் இன்று வரை தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் வழங்கப்படவில்லை. இந்நிலையிலேயே எம்மால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையும் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த அரசாங்கம் கூறும் பதில் என்ன?

1700 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமா அல்லது தற்போது இருக்கும் 1350 தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமா? அல்லது பெருந்தோட்ட தொழிலாளர்கள் இந்த அரசாங்கத்தால் முற்று முழுதாக நிராகரிக்கப்படுவார்களா? அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக குறிப்பிட வேண்டும். பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் வீட்டு வேலைகள் செய்வதாகவும் கொழும்பில் கடைகளில் வேலை செய்வதாகவும் எந்த அரசாங்கம் முதலைக் கண்ணீர் வடித்தது.

ஆனால் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை நிராகரிக்கின்றது. பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் தேர்தல் மேடைகளில் பேசும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் அவை எவற்றையும் நிறைவேற்றுவதற்கு தயாராக இல்லை. அவர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்த போதிலும் அந்த வாய்ப்பு அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் முதலாளிமார் சம்மேளனத்துடன் ஏதேனும் இரகசிய தொடர்புகளை பேணுகின்றதா அல்லது அவற்றுக்கு அடிபணிகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை. ஆனால் பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்கின்றன. பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் வாக்குறுதியளித்தே இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தது.

அவ்வாறெனில் தற்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு கூறும் பதில் என்ன? வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் நிறைவேற்றாமல் சர்வதேச நாணய நிதியம் கூறுவதை மாத்திரமே இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. நாட்டை ஆட்சி செய்வது அனுரகுமார திஸாநாயக்க அல்ல. சர்வதேச நாணய நிதியமே. 20 சதவீதமாகக் காணப்பட்ட வறுமை நிலை இன்று 57 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளது.

அந்த 57 சதவீதத்துக்குள் அதிகளவாக பெருந்தோட்ட தொழிலாளர்களே உள்வாங்கப்படுகின்றனர். அரசாங்கம் இதனை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்றது என்பதற்காக இவர்கள் வேண்டியவாறு நாட்டை கொண்டு செல்வதற்கு இடமளிக்க முடியாது. என்றாவது ஒரு நாள் இவர்கள் மீண்டும் மக்களிடம் செல்ல வேண்டி ஏற்படும். அப்போது அவர்கள் சிறந்த பதிலை வழங்குவார்கள் என்றார்.