ரஞ்சித் ஆண்டகை மீது பழிபோட அரசு முயற்சி ; நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

66 0

தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாட்டாளர்களாக செயற்பட்ட சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரின் நியமனம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்ட விடயம் பாரதூரமானது. இவ்விடயத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீது பழிபோட அரசாங்கம் முயற்சிக்கிறது. உண்மையை கத்தோலிக்க சபை வெளிப்படுத்த வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில்  புதன்கிழமை (16) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் இந்த அரசாங்கம் செயற்படுகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நடுத்தர மக்களை பாதுகாப்பதாக குறிப்பிட்டார்கள். ஆனால் இன்று நடுத்தர மக்களின் தொழில் நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு விவகாரம் மற்றும் கொள்கலன் விடுவிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாடு அரச அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அரச சேவையாளர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வெகுவிரைவில் குரல் எழுப்புவார்கள்.

அரச சேவையை வினைத்திறனாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு அச்சேவையை அரசியல்மயப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்கள் வெகுவிரைவில் விளங்கிக் கொள்வார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாட்டாளர்களாக செயற்பட்ட சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரின் நியமனம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்ட விடயம் பாரதூரமானது.இவ்விருவரும் மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக சந்திப்புக்களை நடத்தினார்கள்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்ட விடயத்தின் உண்மையை கத்தோலிக்க சபை வெளிப்படுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் குறிப்பிடுவது வரவேற்கத்தக்கது. தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்ட பொய்களுக்கு முடிவு அப்போது தான் கிடைக்கும் என்றார்.