மாத்தறை – திக்வெல்ல பகுதியில் ஒரு கிலோ ஹெரோயினை காரில் கடத்திச் சென்ற மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஸ்கல பொலிஸ் வீதி தடைக்கருகில் கடந்த புதன்கிழமை சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை இடைமறித்து பொலிஸார் சோதனையிட்டனர்.
அதிகாரிகள் வாகனதிலிருந்த பொதியொன்றை எடுத்து திறந்து பார்த்து பரிசோதித்த வேளையில், சந்தேகத்திற்கிடமான காரில் வருகை தந்திருந்த மூன்று நபர்களும் அவ்வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்ற பொதியிலிருந்து சுமார் 1 கிலோ 50 கிராம் எடையுடைய ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன், காரின் வாகன இலக்கத் தகடு மற்றும் வாகன பதிவு விபரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தப்பிச் சென்ற சந்தேக நபர்களில் ஒருவர் வியாழக்கிழமை (10) காலை ஹக்மன பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தப்பியோடிய ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் திக்வெல்ல பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

