பிள்ளையானின் தீவுச்சேனை மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை?

74 0

அரசாங்கம் செய்த குற்றங்களை பிறிதொரு  அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல்கள் உள்ளன என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள நிலையில், உண்மையான நீதி வேண்டுமாயின் செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியமானது. அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்  கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில்   புதன்கிழமை (09) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதி மறுக்கப்பட்டது என்பது நல்லிணக்கத்திற்கு பாதகமான ஒரு விடயமாக அமையும்.

பொறுப்புக்கூறல் என்பது நல்லிணக்கம் உருவாக முக்கிய விடயமாக உள்ளது. குறிப்பாக 1998 / 99 காலப்பகுதியில் சோமரட்ன ராஜபக்ஷ எனும் நபர் வாக்குமூலத்தின் அடிப்படையில் செம்மணி பிரதேசத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 15 மனித எச்சங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இவ் எச்சங்கள் ஸ்கொட்லாந்தில் கிளாஸ்கோவில் உள்ளதாக அறிகின்றோம். ஏன் இவற்றை இலங்கை அரசாங்கம் ஆய்வு செய்யவில்லை? டி.என்.ஏ பரிசோதனை இலங்கை அரசாங்கத்திற்கு மேற்கொள்ள வசதிகள் இல்லாத நிலையில் ஏன் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியை நாட தயங்குகின்றது? அன்று இந்த எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. இப்போதும் அங்கு அகழ்வுகள் நடக்கின்றன.

அரசாங்கம் செய்ய குற்றங்களை அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல்கள் உள்ளன என ஜனாதிபதி கூறியுள்ளார். இதானாலேயே நாங்கள் சர்வதேச விசாரணை ஒன்றினை எதிர்பார்க்கின்றோம்.

அரசாங்கம் ஊழல் ஒழிப்பிற்கு விசேட அலுவலகம் ஒன்றை உருவாக்க யோசிப்பது போல் ஏன் மனித உரிமை மீறல்களை விசாரிக்க அலுவலகம் அமைக்கவில்லை? ஆரையம்பதியில் கொல்லப்பட்ட விஜிதா, மட்டக்களப்பில் கொல்லப்பட்ட ரிபாயா, பிறேமினி,மனித புதைகுழி உள்ள கொக்குத்தொடுவாய்,மாத்தளை, செம்மணி,  மற்றும்  இன்னும் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை ஆகியவற்றின் மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை? இதனால் இந்த விடயத்தில் சர்வதேச விசாரணைகள் அவசியமானது என்றார்.