யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதை கண்டித்து கடந்த 2018 ஆம் ஆண்டு பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது இரு விவசாயிகளை கைது செய்தமையின் ஊடாக பொலிஸார் அவர்களது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதற்கமைய மனுதாரர்களான குறித்த இரு விவசாயிகளுக்கும் அரலகங்வில பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.ஆர். பண்டாராவுக்கு 30 ஆயிரம் ரூபாவை தனது தனிப்பட்ட பணத்தில் இருந்து நட்டயீடாக செலுத்துமாறு உயர்நீதிமன்றம் 7ஆம் திகதி திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.ஏ.காமினி ஜெயரத்ன மற்றும் எச்.ஆர்.எரந்த ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படைய உரிமை மீறல் மனு திங்கட்கிழமை (7) விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ நீதியரசர் எஸ்.துரைராஜா ஆகியோரின் ஏகமனதான தீர்மானத்துடன் நீதியரசர் யசந்த கோடகொட இந்த தீர்ப்பை அறிவித்தார்.
மேலும் பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய சந்தேகநபர்களை விளக்கமறியில் வைக்கும் உத்தரவை நீதவான்கள் பிறபிக்கக்கூடாது என நீதியரசர் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சந்தேக நபர் ஒருவரை தடுப்பு காவலில் வைக்குமாறு பொலிஸார் முன்வைக்கும் கோரிக்கையின் தேவைப்பாடு தொடர்பில் நீதவானுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அத்தியாவசிய தேவை பொலிஸாருக்கு உண்டு என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிணைச்சட்டத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்பட்டத்துக்கு அமைய பிணை வழங்கும் போது பிணை வழங்கலை மறுப்பதற்கான உரிய காரணம் நீதவான் கூற வேண்டும் என சுட்டிக்காட்டிய நீதியரசர்,
பிணை வழங்குதலையோ அல்லது பிணை மறுப்பிணை மேற்கொள்வதற்கோ பொலிஸார் முன்வைக்கும் கோரிக்கை மாத்திரம் அடிப்படையாகக்கொண்டு தீர்மானிக்க முடியாது என்றும் குற்றவியல் நியாயத்தின் நோக்கத்துக்கு அமைவாக அத்தீர்மானத்தை எடுத்தல் வேண்டும் எனவும் நீதியரசர் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதித்துறை பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளது என்பதை நீதவான்கள் நன்கு நினைவிற் கொள்ள வேண்டும் என தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டிய நீதியரசர், சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் மாத்திரமே அத்தகைய உரிமைகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
இந்தத் தீர்ப்பில் உள்ள அடிப்படை நோக்கம் குறித்து நீதவான்களுக்கு தெளிவுப்படுத்த நீதிபதிகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம் உரிய நடவடிக்கையை முன்னெடுக்கும் என்பது நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பாகும் என நீதிபதி யசந்த கோடகொட தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
மேலும் அடிப்படை உரிமைகளை மீறாத வகையில் பொலிஸார் பொதுமக்களின் போராட்டங்கள் கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட நீதியரசர், இது தொடர்பாக பொலிஸார் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க வனவள பாதுகாப்பு பணிப்பாளர் நாயகத்துக்கு முறையான திட்டமொன்றை தயாரிக்குமாறு உத்தரவு பிறப்பித்த நீதியரசர், இந்தத் தீர்ப்பின் பிரதிகளை சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், வனவள பாதுகாப்பு பணிப்பாளர், அரலகங்வில பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் இதர தரப்பினருக்கு அனுப்பி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்

