யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனம், யாழ் மாவட்ட கிராமிய சம்மேளனம் என்பவற்றின் பிரதிநிதிகள் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கு இடையே இன்று (22) சந்திப்பொன்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு – தீர்த்தக்கரைப் பகுதியில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வடபகுதிக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அண்மையில் முல்லைத்தீவு காணாமல் போன மீனவர்கள் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டாளர்களால் கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முற்றாக தடைசெய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இதன்போது யாழ் கடற்றொழில் அமைப்பினரால் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை முற்றாக தடைசெய்வது தொடர்பில் தம்மாலான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென இதன்போது பாராளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

