நாடு திரும்பிய சிவலோகநாதனின் கைதுக்கு மனோ எம்.பி கடும் கண்டனம்

92 0
தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, உங்களை நம்பி, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில், எதற்காக கைது செய்தீர்கள்? கைது செய்து, இன்று பிணையில் வெளியே விடாமல், சிறையில் அடைக்கிறீர்கள்? வெளிநாடு சென்ற தமிழர்களை திரும்பி “வாங்கோ, வாங்கோ” என நீங்கள் தானே வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள்? உங்களை நம்பி வந்தால், திரும்பி வந்தால் விமான நிலையத்தில் கைது செய்வதா? என தமுகூ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கை துணை தூதரகம் தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசாங்கத்துக்கு தெரியாதா? வெளிநாட்டு அமைச்சுக்கு தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன.

ஐநா அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்கு பயண சீட்டு வாங்கி கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்து, விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. இவை உங்களுக்கு தெரியாதா? என மனோ கணேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பில் மனோ எம்பி தனது எக்ஸ் தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஊழல் பேர்வழிகளை கைது செய்து சிறையில் அடையுங்கள். அதை செய்யத்தான் வேண்டும். இன்னமும் நானூற்றுக்கணக்கான ஊழல் கோப்புகள் இருப்பதாக சொன்னீர்கள். அனைவரையும் கைது செய்து, விசாரித்து, ஆவன செய்யுங்கள். சட்டத்தில் இடமிருந்தால் ஊழல் பேர்வழிகளுக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்குங்கள். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

ஆனால், எதற்காக தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில், கைது செய்து, பிணையில் வெளியே விடாமல், சிறையில் அடைக்கிறீர்கள்?

75 வயதான சின்னையா சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கை துணை தூதரகம்தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசாங்கத்துக்கு தெரியாதா? வெளிநாட்டு அமைச்சுக்கு தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன.

ஐநா அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்கு பயண சீட்டு வாங்கி கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்து, விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள் தானே திரும்பி வர சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைதா? என மனோ கணேசன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.