முதல்வர் தெரிவித்த கருத்துக்கு விஜய் கண்டனம்

81 0

 அண்ணா பல்கலை. விவகாரத்தில் மனசாட்சியின்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பச்சை பொய் கூறுவதாக தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை: அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திமுக நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தவெக வரவேற்கிறது. இவ்வழக்கில் தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காகத் திமுகவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.இதுதொடர்பாக நான் தமிழக ஆளுநரைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவை வழங்கினேன்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் போராட்டங்களைத் தொடர்ந்து, தாமாக முன்வந்து வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் காவல் துறையின் தவறால் முதல் தகவல் அறிக்கை வெளியாகி, பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காக, அவருக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தைத் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதை மக்கள் மறக்கவில்லை.

ஞானசேகரனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். தொடர்புடைய அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை துரிதப்படுத்தியதால்தான் 5 மாதங்களில் தீர்ப்பு வந்துள்ளது.

ஆனால் இவற்றையெல்லாம் மறைத்து, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டதற்குத் தமிழக காவல் துறை தான் காரணம் என்று மனசாட்சியின்றிப் பச்சைப் பொய்யை திமுக தலைவர் கூறி சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறார். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய செயல் திறன் அற்ற அவல ஆட்சி இது. இந்தக் கொடுமைகளுக்காகத் தமிழக மக்கள் இன்னும் 10 மாதங்களில் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்பது உறுதி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.