நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வர்த்தமானியை திரும்பப் பெற வேண்டும்!

113 0

காணி சுவீகரிப்புக்காக பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த வர்த்தமானியை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறு இல்லாவிடின் மக்கள் போராட்டங்களையும் நடத்துவோம். தமது  காணிகளை மக்கள் இழக்காமல் இருப்பதற்குரிய சட்ட ஆலோசனைகளை இலவசமாக வழங்குகிறோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

2025.03.28 ஆம் திகதியன்று 2430 ஆம் இலக்கத்தின் காணி நிர்ணயச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி தொடர்பில்  வெற்றிலைக்கேணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (25)  நீதி அமைப்பினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்ட சட்ட ஆலோசனை முகாமில் கலந்துக் கொண்டதன் பின்னர்  தமது செயற்பாடுகளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது;

காணி திணைக்களத்தால் 2025.03.28 ஆம் திகதியன்று காணி  நிர்ணய கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி தொடர்பில்  மக்களுக்கான நீதி அமைப்பின் ஊடாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.இந்த நிர்ணய கட்டளைச்சட்டத்தின் கீழ் குறித்த பிரதேசத்தை அடையாளப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரித்தால் அப்பகுதியில் உள்ள காணி உரிமையாளர்கள் அல்லது உரிமை கோர்பவர்கள் மூன்று மாத காலத்துக்குள் தமது காணிக்கான உரித்தை உறுதிப்படுத்த வேண்டும். காணி உரித்துக்கான ஆவணங்களை  சமர்ப்பிக்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் இந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.1931 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணி உரித்து தொடர்பில் காணப்பட்ட பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்காகவே இந்த சட்டம் இயற்றப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்ட இடப்பெயர்வுகள் இடம்பெற்றன.இதனால் பலர் தமது காணிக்குரிய ஆவணங்களை இழந்துள்ளனர்.அதேபோல் சுனாமி  அனர்த்தத்தால் பலர் தமது ஆவணங்கள் மற்றும் உரித்துக்களை இழந்துள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் அசாதாரன சூழல் தொடர்ந்து காணப்படுகின்ற நிலையில் மீள்குடியேற்றம் முழுமைப் பெறாத நிலையில், 1 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் அகதிகளாக வாழ்கின்றனர்.இவ்வாறான தீர்க்கப்படாத சிக்கல்கள் காணப்படுகின்ற சூழலில் காணி நிர்ணயச்சட்டத்தை அமுல்படுத்துவது மிக மோசமானதொரு செயற்பாடு.

காணி சுவீகரிப்புக்காக பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த வர்த்தமானியை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறு இல்லாவிடின் மக்கள் போராட்டங்களையும் நடத்துவோம்.தமது  காணிகளை மக்கள் இழக்காமல் இருப்பதற்குரிய  இலவச சட்ட ஆலோசனைகளை வழங்குகிறோம்.

குறித்த ஏதேனும் காணிக்கு உரிமம் கோருபவரிடம் உள்ள ஏதேனும் ஆவணம் அந்த காணிக்கான சட்ட உரித்தை கோருவதற்கு போதுமானதாக அமையுமா,  அல்லது காணப்படும் சிக்கல்களுக்கு எவ்வாறான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான சட்ட ஆலோசனைகளையும் வழங்குவோம். மேலதிக சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளோம்.

இன்றைய தினம் (நேற்று) 20 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் தன்னிச்சையான முறையில் இலவசமாக சட்ட ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்;ளார்கள்.யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சட்டபீடத்தில் கல்வி கற்கும் 15 மாணவர்கள் இந்த சட்ட ஆலோசனை நடவடிக்கைகளுக்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

எதிர்வரும் நாட்களில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு  ஆகிய மாவட்டங்களுக்கு சட்ட ஆலோசனை நடவடிக்கைகளுக்கு செல்வோம். 2025.03.28 ஆம் திகதியன்று பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி வாபஸ் பெற வேண்டும் என்பது எமது பிரதான வலியுறுத்தலாக உள்ளது.தற்போதைய சூழ்நிலையில் இந்த வர்த்தமானியை பிரசுரித்தது பொருத்தமானதல்ல என்றார்.