சமிந்த விஜேசிறி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டு கையளித்துள்ள கடிதத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஏற்றுக் கொள்ளவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் பயணத்தை தொடர வேண்டும் என்பதே பொதுச் செயலாளர் என்ற ரீதியில் நான் வழங்கும் அறிவுரையாகும் என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்துக்கு பெரும்பான்மை அற்ற சபைகளில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன.
மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறவுள்ளன. கொழும்பு மாநகரசபையில் எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்கவுள்ளன. சுயேட்சை குழுக்கள் வெறுமனே பேச்சுவார்த்தைக்கு மாத்திரமே சென்றுள்ளன.
சமிந்த விஜேசிறி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகியமைக்கான காரணம் குறித்து கேட்டறிந்த பின்னரே எந்தவொரு கருத்தினையும் கூற முடியும். என்ன அதிருப்தி என்பதையும் அவரே கூற வேண்டும்.
கட்சிக்குள் அவருக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. எதிர்க்கட்சி தலைவருக்கு பதவி விலகல் கடிதம் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எனக்கு அறிவித்திருக்கின்றார். எனினும் சமிந்த விஜேசிறியுடன் கலந்துரையாடிய பின்னரே எந்தவொரு தீர்மானத்துக்கும் வர முடியும்.
கலவரமடையாது தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் பயணத்தை தொடர வேண்டும் என்பதே பொதுச் செயலாளர் என்ற ரீதியில் நான் வழங்கும் அறிவுரையாகும்.
இந்நாட்டில் முதன் முதலாக ஆயுதமேந்தி மக்களை கொல்லும் கலாசாரத்தை ஆரம்பித்தது ஜே.வி.பி.யினரே. அவ்வாறிருக்கையில் எதிர்க்கட்சிகளுக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பிருப்பதாக அவர்கள் கூறுவது வேடிக்கையாகவுள்ளது.
பாதாள உலகக்குழுக்கள் செயற்பட ஆரம்பித்ததும் ஜே.வி.பி.யினராலேயே என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்துகின்றோம் என்றார்.

