மன்னார் தீவு வேகமாக அழிவுநிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது

142 0
மன்னார் மாவட்டத்தில் மன்னார் தீவு திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது. வேகமாக அழிவு நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. அதற்கு அதிகாரிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பல தொழில் நிறுவனங்களும் முன் நின்று செயற்பட்டு வருகின்றன. இதற்கு மக்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ். மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று புதன்கிழமை (21) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

மக்களின் எவ்வித அனுமதியுமின்றி கணிய மணல் அகழ்வு நடவடிக்கை மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்காக மக்களின் காணிகள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதனையும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் செயற்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் பாதிக்கப்படும் என சூழலியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும் மக்களின் எதிர்கால பிரச்சினைகளை உள்வாங்காமல், அரச திணைக்களங்களின் ஆதரவுடன் பல நிறுவனங்கள் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றன.

மக்களை அழிவிலிருந்து காப்பாற்றாது, இலாபத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்படும் பல்தேசிய நிறுவனங்கள் மக்களின் வாழ்விடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற வகையில் செயற்பட்டு வருகின்றன.

இவ்வாறு வருகின்ற எந்த நிறுவனங்களுக்கும் மக்கள் எவ்வித உதவிகளையும் வழங்க வேண்டாம். இரண்டு கணிய மணல் அகழ்வு நிறுவனங்களும் மூன்று காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களும் மன்னார் மக்களுக்கு எதிராக மிக வேகமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்த நிறுவனங்கள் பலரை பணம் கொடுத்து வாங்கும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள மக்களை ஏமாற்றி, மக்களின் வாழ்வாதாரத்துக்காக தாம் கை கொடுப்பதாக கூறி, மக்களே இத்திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

மேலும், மக்களின் காணிகளை அதிக பணம் கொடுத்து வாங்கி காணியை தமக்கு சொந்தமாக்கிக்கொண்டு வாழ்விடங்களை பறிக்கும் ஒரு நிலையையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

எனவே, மன்னார் மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு எதிராக போராட முன்வர வேண்டும். மக்கள் இத்திட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதியை வழங்கக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.