வீதி விபத்துக்களை தடுப்பதற்கான செயற்றிட்டம்; அடுத்த இரு மாதங்களுக்குள் நடைமுறையாகும்

118 0

நாடு முழுவதும் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைத் தொடர்ந்து, 16நிறுவனங்களால் கூட்டாக தயாரிக்கப்பட்ட வீதி விபத்துகளைத் தடுப்பதற்கான செயல் திட்டம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் செயற்படுத்தப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மூன்று மாதங்களுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட ‘வீதிப் பாதுகாப்பை’ மையப்படுத்திய செயற்றிட்டத் தயாரிப்பு தற்போது நிறைவுக்கு வந்துள்ளதுள்ளது. இத்திட்டமானது வீதி விபத்துக்களால் ஏற்படும் இறப்புகள் மற்றும் காயங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டே ஆரம்பிக்கப்பட்டிருந்து.

வீதிப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பிலுள்ள அனைத்து முக்கிய பங்குதாரர்களும் இந்த திட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கப்படுகிறார்கள். இதில் பயணிகள் போக்குவரத்து ஆணையகம், ரயில்வே துறை, பொலிஸார், மோட்டார் போக்குவரத்து துறை, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

உலக வங்கியின் கூற்றுப்படி, இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 38,000வீதி விபத்துகள் பதிவாகுவதோடு இதன் விளைவாக சுமார் 3,000 உயிரிழப்புக்கள் நிகழ்கின்றன. அத்துடன் 8,000 பேர் படுகாயமடைகிறார்கள்.

மதிப்பிடப்பட்ட வருடாந்த தனிநபர் வீதி விபத்து இறப்பு விகிதமானது தெற்காசிய நாடுகளில் மிக உயர்ந்ததாக காணப்படுவதோடு உலகில் சிறப்பாக செயற்படும் நாடுகளை விட ஐந்து மடங்கு அதிகமாக காணப்படுவதாக கூறப்படுகின்றது.