நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 19 ஆயிரத்து 724 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையை தொடர்ந்து நாளாந்தம் அடையாளம் காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் தென்மேற்கு பருவப்பெயர்ச்சியுடன் இந்நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாகவும் பூச்சியியல் ஆய்வாளர்கள் எதிர்வுக் கூறியுள்ளனர். அந்தவகையில் இவ்வருடத்தின் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் மே 12 திகதி வரையான காலப்பகுதியில் சுமார் 19 ஆயிரத்து 724 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதமே நாட்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் அம்மாதத்தில் மாத்திரம் சுமார் 5,175 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இம்மாதத்தின் கடந்த 12 நாட்களில் 2,178 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கொழும்பு, கொழும்பு மாநகர சபை, கம்பஹா மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகுவதை காணக் கூடியதாக உள்ளது.
இதேவேளை நுளம்புகளால் பரவும் மற்றொரு வைரஸ் நோயான சிக்குன்குன்யாவால் பலரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நுளம்புகள் மற்றும் நுளம்பு குடம்பிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சால் மே மாதம் விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை பிரதான கேந்திர நிலையமாகக் கொண்டு நுளம்பு ஒழிப்பை விரைவுபடுத்தவும், அவதானம் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முறையான கட்டுப்பாட்டு முறைகளால் மாத்திரமே டெங்கு பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இதுதொடர்பில் அதிகாரிகள் மாத்திரமல்லாது பொதுமக்களும் அவதானத்துடனும் கரிசனையுடனும் செயற்படுவது அவசியம்.
ஆகையால் பொதுமக்கள் டெங்கு அபாயத்தை கருத்தில் கொண்டு தாம் வாழும் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருக்கக்கூடிய பகுதிகளை இனங்கண்டு அவற்றை இல்லாதொழித்து தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

