இளைஞனின் அடிவயிற்றில் பல தடவைகள் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினார் எனக் கூறப்படும் புலமைப்பரிசில் வகுப்புகளை நடத்தும் ‘டீச்சர் அம்மா’ என்ற புனைப் பெயரால் அழைக்கப்படும் ஹயேஷிகா பெர்னாண்டோவை, கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரான அந்த பெண்ணின் தொலைபேசி செயலிழந்து உள்ளது. அவர், தன்னுடைய மகளுடன் அப்பிரதேசத்தை விட்டு தலைமறைவாகி உள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல்களுக்கு உள்ளான இளைஞனின் சகோதரி, தன்னுடைய முகப்புத்தகத்தில் (பேஸ்புக்) பதிவிட்ட ஒரு பதிவுக்கு பழிவாங்கும் நோக்கில், அந்த இளைஞன் மீது, ‘டீச்சர் அம்மா’ அவருடைய கணவன், அவர்களின் நிறுவனத்தின் முகாமையாளர் ஆகியோர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது விசாரணைகள் ஊடாக கண்டறிப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ‘டீச்சர் அம்மா’ என அழைக்கப்படும் ஹயேஷிகா பெர்னாண்டோ என்பவரின் கணவர் மற்றும் முகாமையாளர் கட்டான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், புதன்கிழமை (14) வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் கட்டளையின் அடிப்படையில் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

