அரசின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் வலுவான பொது எதிரணியை உருவாக்குவேன்

90 0

உள்ளுராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் ஊடாக அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அத்துடன் உண்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கான அங்கீகரித்தை எதிக்கட்சிக்கு வழங்கியுள்ளனர் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சகல எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டி வலுவான பொது எதிரணியை உருவாக்க மக்கள் வழங்கிய ஆணையை முழு மூச்சுடன் முன்னெடுக்க கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உள்ளராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் பின்னர் புதன்கிழமை (7) விசேட அறிவிப்பை வெளியிட்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

அவமானங்கள், அச்சுறுத்தல்கள், சேறுபூசும் வார்த்தைகள், சதித்திட்டங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து ஆதரவு வழங்கிய  மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த முன்வந்து தேர்தல் வெற்றிக்கு ஒத்துழைப்பை நல்கிய நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களிலும்  பெரும் மக்கள் ஆணைகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், 6 மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளமையை உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. எனவே எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்பினர்களையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என்ற செய்தியை நாட்டு மக்கள் இத்தேர்தலின் ஊடாக எமக்கு முன்வைத்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலை கையாண்டது போலவே இந்த உள்ளூராட்சித் தேர்தலையும் ஜே.வி.பி கையாண்டது. தேர்தலுக்காக மதத்தைக் கூட அரசாங்கம் பயன்படுத்தயது.

நாட்டு மக்கள்  அரசாங்கத்தின் பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். உண்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கான அங்கீகரித்தை எதிக்கட்சிக்கு வழங்கியுள்ளனர். பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பொய்களை முறியடித்து, உண்மையான பலம் வாய்ந்த மக்கள் சேவைக்காக எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்புகளையும் ஒன்றிணைய வேண்டும் என்ற பொதுமக்களின் அபிலாஷையின் அடிப்படையில் இந்த சவாலான பொறுப்பிற்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பவர்களாக, நாங்கள் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு தலைவணங்கி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்பினர்களையும் ஒன்றிணைப்போம். அதன் ஊடாக வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், கொள்கை ரீதியானதுமான சிறந்த மக்கள் சேவையை வழங்க உள்ளோம். இதற்கான தலைமைத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.