கொழும்பு மாநகர சபையில் புதிய நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளுடன் இணைந்து அமைக்கும்

69 0

கொழும்பு மாநகர சபையில் புதிய நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளுடன் இணைந்து அமைக்கும். புதிய மேயர் எமது கட்சியைச் சேர்ந்தவரே நியமிக்கப்படுவார். ஆளும் தரப்பு பெரும்பான்மையைப் பெறாத, பிற உள்ளூராட்சி சபைகளில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஏனைய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

அரசாங்கம் அமைக்கப்பட்டு குறுகிய காலத்தில், உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஊடாக அரசாங்கம் தொடர்பான தங்கள் கருத்தை மக்கள் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரசாங்கம் அமைக்கப்பட்டு சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில், மக்கள் அரசாங்கத்தை நிராகரித்துவிட்ட நிலையைக் காட்டுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்ற கட்சி உள்ளூராட்சி நிறுவனங்களையும் வென்றுள்ளன. ஆனால் வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் வாக்கு விகிதம் குறைந்துள்ளன.

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 68 இலட்சம் வாக்குகளைப் பெற்றது. ஆனால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் விரைவான சரிவு ஏற்பட்டுள்ளது. பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) 62 சதவீத வாக்குகளைப் பெற்றது. இருப்பினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வாக்கு 43 சதவீதமாகக் குறைந்துள்ளன.

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 18 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியால் (SJB) 22 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடிந்தது. இதேபோல், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற கட்சிகளும் தமது வாக்கு சதவீதங்களை அதிகரித்துள்ளன. இருப்பினும், அரசாங்கத்தின் வாக்குப் பலம் குறைந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலைப் போலவே, சிறு தரப்பினர் மட்டுமே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர். பொதுத் தேர்தலில் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணை இங்கே எடுபடாது. மக்கள் அரசாங்கத்தின் திட்டத்தை நிராகரித்துவிட்டனர். இது எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. கடந்த 5 மாதங்களாக, அரசாங்கத்தின் திட்டத்தால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

எதிர்காலத்தில், உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை நிறுவும்போது எதிர்க்கட்சியின் ஒற்றுமையை அரசாங்கத்திற்கு நிரூபிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

வென்ற அதிக எண்ணிக்கையிலான உள்ளூராட்சி மன்றங்களில் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை.

மக்களின் வாக்குகளுக்கு மதிப்பு அளித்து, அதிக அளவிலான உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிலைநாட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல கட்சிகளுடனும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

நாட்டின் ஜனநாயகத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.தேர்தல் விதிகள் மீறப்பட்டுள்ளன.  நாட்டின் பிரதமர் கூட தேர்தல் சட்டங்களை மீறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

நாட்டில் ஜனநாயக தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் அறிவித்தது. எவ்வாறாயினும், களுத்துறை ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ஒருவர் சுடப்பட்டுள்ளார்.

தெரணியகல வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். அரசாங்கம் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ளது. அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் எந்தவொரு பயங்கரவாதச் செயலையும் மேற்கொள்ளும்.

ஜே.ஆர். ஜயவர்தனவும், ரணசிங்க பிரேமதாசாவும் மக்கள் விடுதலை முன்னனணியினரை ஜனநாயக கட்டமைப்பிற்குள் நுழைய அனுமதித்தனர். இருப்பினும், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் வாக்குப் பலம் குறைந்துபோயுள்ளது.

அரசாங்கம் மீண்டும் பயங்கரவாதத்தின் மூலம் நாட்டை ஆட்சி செய்யுமா என்ற சந்தேகம் எழுகிறது. அரசாங்கத்தின் வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.