மீட்டியாகொடை இரட்டை கொலை ; சந்தேக நபர்கள் கைது

93 0

காலி – மீட்டியாகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பஹிட்டிய பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் கடந்த 03 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் மீட்டியாகொடை பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீட்டியாகொடை பிரதேசத்தில் வசிக்கும் 22 மற்றும் 29 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

மீட்டியாகொடை – தம்பஹிட்டிய பிரதேசத்திற்கு இரு மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேக நபர்கள் சிலர் இரண்டு நபர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீட்டியாகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.