அவுஸ்திரேலிய தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி : மீண்டும் பிரதமராகிறார் அன்டனி அல்பனீஸ்

102 0

அவுஸ்திரேலியாவில் சனிக்கிழமை (3) இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் அன்டனி அல்பனீஸ் பிரதமராகிறார்.

அவுஸ்திரேலிய தேர்தல் வரலாற்றில் கடந்த 21 ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகப் பதவியேற்கும் முதல் அவுஸ்திரேலிய பிரதமராக அன்டனி அல்பானீஸ் காணப்படுகின்றார்.

அவுஸ்திரேலியாவில் மொத்தம் 150 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும்.

அந்த வகையில் சனிக்கிழமை (3) இடம்பெற்ற அவுஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில்,  அவுஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும்  போட்டியிட்டன.

பிரதமர் அண்டனி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சி களமிறங்கியது. எதிக்கட்சி தலைவர் பீற்றர் டட்டன் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சி களமிறங்கியது.

தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,அவுஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், அன்டனி அல்பனீஸ் மீண்டும் அவுஸ்திரேலிய பிரதமராகிறார்.

அல்பனீஸ் 2 ஆவது தடவையாக அவுஸ்திரேலிய பிரதம் ஆகிறார். பிரதமராக அல்பனீஸ் பதவியேற்கும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

தோ்தல் முடிவுகள் வெளியானதையடுத்து கருத்து வெளியிட்ட அன்டனி அல்பனீஸ்,

அவுஸ்திரேலியாவின் பண்பாட்டை மீட்பெடுப்பதற்காக மக்கள் வாக்களித்துள்ளனா். நாட்டின் எதிா்காலம் அவுஸ்திரேலிய கலாசாரத்தில் இருந்து விலகாமல், பிற நாடுகளில் இருந்து வேறுபட்டு இருப்பதை உறுதி செய்வதற்காக அவுஸ்திரேலிய பாணியில் மக்கள் வாக்களித்துள்ளனா்.

நாம் எந்தவொரு வெளிநாட்டிடம் இருந்தும் கொள்கைகளைக் கடன் வாங்கவோ, பிரதியெடுக்கவோ தேவையில்லை. நமக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கிறது எனத் தெரிவித்தார்.