தமது வேட்பாளர்களின் வெற்றி மீதுள்ள அவநம்பிக்கையால் ஜனாதிபதியே தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார்

89 0

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் இடம்பெற்று வருகின்றன. தமது வேட்பாளர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தானே தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். இது பொய் கூறும் அரசாங்கம் அல்ல, பொய்யால் உருவான அரசாங்கம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில்  வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது பிராந்திய ஸ்திரத்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான நிலைவரங்கள் அயல்நாடுகளில் நிலவுகின்றன. எனவே இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தற்போதைய நிலைமையை பொறுமையாகவும் அமைதியாகவும் கையாள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் யுத்த நிலைமையே காணப்படுகிறது.

ஒருபுறம் இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல் இடம்பெற்று வரும் நிலையில், மறுபுறம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையில் பொருளாதாரப் போர் ஆரம்பித்திருக்கிறது.

எனவே ஆசிய பிராந்தியத்தை அமைதியாகப் பேண வேண்டியது சகல ஆசிய நாடுகளினதும் பொறுப்பாகும். அந்த வகையில் இவ்விரு நாடுகளும் அமைதியாக செயற்படுவதே முக்கியத்துவம் வாய்ந்தது.

அரசாங்கமும் சர்வதேச நிலைமைகள் குறித்த புரிதலுடன் செயற்பட வேண்டும். தற்போது உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் இடம்பெற்று வருகின்றன.

தமது வேட்பாளர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தானே தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். இது பொய் கூறும் அரசாங்கம் அல்ல, பொய்யால் உருவான அரசாங்கம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

தலதா வழிபாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதிலும், அரசாங்கத்தால் அதற்கான முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. சன நெறிசலை கட்டுப்படுத்த முடியாது போயுள்ளது.

இதன் காரணமாகவே ஜனாதிபதி மீண்டும் அங்கு சென்றிருக்கின்றார். அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

கடந்த ஆட்சியாளர்கள் தலதா வழிபாட்டுக்குச் செல்லும் போது ஊடகங்களையும் அழைத்துச் செல்வதாக அன்று ஜே.வி.பி. விமர்சித்தது. ஆனால் இன்று அவர்களும் அதையே செய்கின்றனர் என்றார்.