ஜே.வி.பியினர் வல்வை மண்ணில் முகாமிட்டுத் தங்களை நம்புங்கள் கரை சேர்ப்போம் என்று முழங்குகிறார்கள். கப்பலோட்டிய நாங்கள் காகிதக் கப்பல்களில் பயணிக்க மாட்டோம் என்ற பதிலை வல்வெட்டித்துறை மக்கள் இந்தத் தேர்தலில் ஜே.வி.பியிடம் உரத்துச்சொல்ல வேண்டும் என்றும் பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வல்வெட்டித்துறை நகரசபையில் போட்டியிடும் தமிழ்த்தேசியப் பேரவையின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் வைக்கும் வைக்கும் கூட்டம் கடந்த சனிக்கிழமை (19) வல்வெட்டித்துறை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வல்வெட்டித்துறை மக்கள் அறிவுத்திறன் மிக்கவர்கள். தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத காலத்திலேயே நூற்றுக்கணக்கான கப்பல்களைக் கட்டித் திரைகடலோடித் திரவியம் தேடியவர்கள்.
இவர்களது கப்பல்கள்தான் இரண்டாம் உலக யுத்த காலத்தில் உணவுப் பொருட்களைச் சுமந்துவந்து இலங்கை மக்களைப் பட்டினியில் இருந்து காப்பாற்றின. பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சிங்களத் தலைவர்களைக் காப்பாற்றித் தலைமறைவாகத் தமிழகம் கொண்டுசென்று சேர்ப்பித்தன.
அன்னபூரணி அம்மாள் என்ற கப்பலின் கட்டுமான அழகில் மயங்கிய அமெரிக்கர்கள் அதனை வாங்கி வல்வை மண்ணின் மாலுமிகளின் உதவியோடு அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றார்கள்.
வல்வெட்டித்துறை மக்கள் தொன்றுதொட்டுத் தினந்தினம் கடல் அலைகளோடு போராடி வாழ்ந்தவர்கள். இதனால், இயல்பாகவே திடகாத்திரம் உள்ளவர்களாகவும், மரண பயம் அற்றவர்களாகவும், வீரம் செறிந்தவர்களாகவும் திகழ்ந்தார்கள்.
ஆயுதப் போராட்டம் முளைவிடுவதற்கு முன்பாகவே அத்துமீறிய சிங்களச் சிப்பாய்களை நையப்புடைத்திருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாகவே, வல்வை மண்ணில் இருந்து தனியாகக் கடற்படையொன்றை வைத்து ஆளும் அளவுக்கு தமிழினத்துக்கான தலைமை ஒன்று பரிணாமித்தது.
ஆனால், இந்த வரலாறுகள் எதுவும் தெரியாததாகவே எமது இளைய தலைமுறை உள்ளது.
எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளையும், ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் அது கருக்கொண்டதற்கான காரணங்கள் இன்னமும் அப்படியே நீடிப்பதையும் எமது இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லாமல் எமது அரசியல் தலைவர்கள் தவறிழைத்துவிட்டார்கள்.
இதனாலேயே, காலங்காலமாகத் தமிழின விரோத நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்த ஜே.வி.பியினால் இலகுவில் இங்கு காலூன்ற முடிகிறது.
பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற ருசியில் இப்போது ஊரும் நமதே என்று வந்து நிற்கிறார்கள். ஆனால், ஊர் எங்களதுதான் என்ற தெளிவான பதிலைத் தமிழ் மக்கள் இம்முறை ஜே.வி.பிக்கு சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

