மட்டக்களப்பு சீயோன் தேவாலய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் 6ஆவது ஆண்டு நினைவேந்தல்

190 0

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (21) காலை தேவாலயத்தின் முன்பாக உயிரிழந்தவர்களின் உறவுகளால் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அனுஷ்டிக்கப்பட்டது.

அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிவதர்சன் தலைமையில் இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

குண்டுவெடிப்பில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலர் இந்த நினைவேந்தலில் கலந்துகொண்டனர்.

இதன்போது, உயிரிழந்தவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி, சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தலின்போது அப்பகுதியில் பொலிஸார் மற்றும் விமானப்படையினர்  பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலால் நாட்டின் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில்  இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.