உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அரசியல் மயப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்க வேண்டாம்

52 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. இது தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் செயலாகும். தற்போது நீங்கள் வீதிக்கு இறங்க தயாரா என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் கேட்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. இது தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் செயலாகும். தற்போது நீங்கள் வீதிக்கு இறங்க தயாரா என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் கேட்கின்றோம். இது முற்றுமுழுதாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல் என்று கூறப்படுகிறது. அவ்வாறிருக்கையில் எதற்காக பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகின்றனர்?

நான் தெரிவித்துள்ள சில கருத்துக்களால் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. ஆனால் நாம் அவற்றைக் கவனத்தில் கொள்வதில்லை. காரணம் நாம் நியாயமான விமர்சனங்களையே முன்வைத்திருக்கின்றோம். ஊழல், மோசடி தொடர்பில் ஆராய்வதாகக் கூறிய அரசாங்கம் 323 கொள்கலன்களை பரிசோதனைகள் இன்றி விடுவித்துள்ளது. எனவே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மக்களுக்கு முன்னாள் தேசிய மக்கள் சக்தி நிலை தடுமாறி நிற்கின்றது. இதன் காரணமாகவே தனது கட்சி வெற்றி பெறாத உள்ளுராட்சிமன்றங்களுக்கு நிதி ஒதுக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். நாம் எந்த பொய்யும் கூறவில்லை என்று அரசாங்கம் கூறுவதே மிகப் பெறும் பொய்யாகும். உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த பதிலை வழங்கக் காத்திருக்கின்றனர். தேர்தல் முடிவுகளில் இந்த அரசாங்கத்தின் இயலாமை வெளிப்படுத்தப்படும் என்றார்.