தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை உள்ளூராட்சிமன்றங்களுக்கு தெரிவு செய்தால் மாத்திரமே அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது அவரது பதவிக்கு அழகல்ல, மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் ஏன் பெரும்பான்மை பலத்தை பயன்படுத்துவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.
நீர்கொழும்பு பகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி பொய்யுரைப்பதை பிரதான அரசியல் கொள்கையாகவும், முழுநேர வேலையாகவும் கொண்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததன் பின்னரும் பொய்யுரைப்பதையும்,மக்களை தவறாக வழிநடத்துவதையும் அரசாங்கம் நிறுத்திக்கொள்ளவில்லை.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் எதற்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை. சமூக கட்டமைப்பில் காணப்படும் எந்த பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை.
பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கினார்கள். எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகவே இந்த அரசாங்கமும் பெரும்பான்மை பலத்தை பயன்படுத்துகிறது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஏன் பெரும்பான்மை பலத்தை பயன்படுத்த முடியாது.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்தால் மாத்திரமே அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது அவரது பதவிக்கு அழகல்ல. மக்கள் சுதந்திரமான முறையில் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்துக்கொள்வதற்கு இடமளிக்க வேண்டும் என்றார்.

