மீகஹவத்த பொலிஸ் பிரிவின் தெல்கொடை பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருட்கள் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று புதன்கிழமை (09) பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூகொடை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 01 கைத்துப்பாக்கி, 05 தோட்டாக்கள், 01 ரிவால்வர், 28 கிராம் 120 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 12 கிராம் 810 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது, அவர் துபாயில் இருந்து செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் எனவும் பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவரின் பிரதான உதவியாளர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

