முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டதுடன் இரு படகுகள் இன்று (9) கைப்பற்றப்பட்டுள்ளன.
களப்புக்கள் மற்றும் பெரும் கடற்பரப்புக்களில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுபவர்களை தொடர்ச்சியாக கடற்படையினரின் உதவியுடன் நீர்வள திணைக்களம், மீனவ சங்கங்கள் மக்களின் ஒத்துழைப்புடன் கைது செய்து வருகிறது.

இந்நிலையில், இன்றைய தினம் அதிகாலை கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட 8.5 கண் குறுக்கிட்டு வலையுடைய படகொன்றும், மீன் ஏற்றும் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டிருந்தன. அத்துடன் 9 சந்தேக நபர்கள் கைதாகினர்.
சந்தேக நபர்களை முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த முல்லைத்தீவு மாவட்ட நீர்வள திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும், நேற்று முன்தினம் இரு படகுகளுடன் இரண்டு பேரும், நேற்றைய தினம் ஒரு படகுடன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட மீனவ சங்கங்களின் மாவட்ட தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டமானது யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள களப்புக்கள், கடற்பரப்பை நம்பியே கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது. எனவே களப்புக்கள், கடற்பரப்புக்களில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பல்வேறு அச்சுறுத்தல்களின் மத்தியில் நாம் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.


