மலையக ஊழல்வாதிகள் சிக்குவர்: சுந்தரலிங்கம் பிரதீப்

81 0

கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிதிகள் மலையகம், வடக்கு,கிழக்கு தெற்கு  என்று அல்லாமல், திருடர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு நிச்சயம் சிறைக்கு செல்வார்கள் என்று  பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில், வியாழக்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிறைவடைந்தவுடன் அவர்களுக்கான விசாரனைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு சட்டம் தனது கடமையை செய்யும் என்றார்.

இன்னும் சில அரசியல்வாதிகள் ரணிலை தலைவனாக ஏற்றுக் கொண்டுள்ளது. அவரின் நிகழ்ச்சி நிரலில் தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் அவ்வாறு அல்ல இந்த நாட்டு மக்கள் எமக்கு மிகப் பெரிய ஆணையினை வழங்கியிருக்கிறார்கள். எனவே, இந்த வரவு- செலவு திட்டத்தை தயாரித்தது தேசிய மக்கள் சக்தி இதை நடைமுறை படுத்தியது.   ரணில் செய்த தவறுகளுக்கு அவர் தண்டனை பெறுவது உறுதியாகிவிட்டது. அவரை காப்பாற்றுவதற்கு மக்கள் மத்தியில் சென்று இவ்வாறு கதைகளை எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர் இவர்கள் கூறும் கருத்துக்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை கொண்ட தனி வீடு திட்டத்தை மக்களுக்கு முன்னெடுக்க இருக்கின்றோம். மலையக மக்களுக்கு ஒரு போதும் மாடி வீட்டு திட்டம் முன்னெடுக்கப்படாது.  கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் எமக்கு ஆணையினை வழங்கியது போல் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டில் உள்ள அனைத்து சபைகளையும் கைப்பற்ற மலையக மக்களும் இந்த நாட்டு மக்களும் முழுமையான ஆதரவினை தேசிய மக்கள் சக்திக்கு  வழங்குவார்கள்