ஜூன், ஜூலை மாதங்களில் பேருந்து கட்டணம் உயரும் ; தனியார் பேருந்துகள் உரிமையாளர் சங்கம்

124 0

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது எரிபொருளின் விலை குறைக்கப்பட்டிருப்பினும் ஜூன், ஜூலை மாதங்களில் குறிப்பிடத்தக்களவில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துகளுக்கும் இடமில்லை என இலங்கை தனியார் பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர்  கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் செவ்வாய்க்கிழமை (01) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது எரிபொருளின் விலை குறைக்கப்பட்டிருப்பினும் ஜூன், ஜூலை மாதங்களில் வருடாந்த பேருந்து கட்டண அதிகரிப்புக்கமைய குறிப்பிடத்தக்களவில் பேருந்து கட்டணம் உயரும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துகளுக்கும் இடமில்லை.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடன் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. இதன்போது ஜூலை மாதம் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படும் என அமைச்சரிடம் உத்தியோகப்பூர்வமாக தெரிவித்திருந்தோம்.

தனியார் பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் பேருந்து கட்டணம் குறைக்கப்படும்.

எனினும் பேருந்து இறக்குமதிக்கு அரசாங்கத்தால் வட் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறோம்.

இதனால் பேருந்து கொள்வனவுக்கான விலை அதிகரிப்புக்கு நிகராக பேருந்து உதிரி பாகங்களுக்கான விலைகளும் அதிகரித்துள்ளன.

ஆகையால் 12 பிரதான காரணங்களின் அடிப்படையில் வருடாந்த பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. தற்போதும் 3 ரூபா நட்டத்துடன் பேருந்து சேவைகள் செயற்படுத்தப்படுகின்றன.

கடந்த முறை வெளியிடப்பட்டிருந்தது எரிபொருள் விலை மாற்றம் சூத்திரத்துக்கு அமைய டீசல் 30 ரூபாவால் குறைக்கப்பட்டு இருந்த நிலையில் பேருந்து கட்டணம் 3 ரூபாவால் குறைக்கப்பட்டது.

குறிப்பிட்ட அளவில் டீசல் விலை குறைந்திருக்குமாயின் அதன் பலனை பொதுமக்களுக்கு வழங்க கூடியதாக இருந்திருக்கும். எனினும் தற்போது பெட்ரோல் விலை மாத்திரமே அவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது என்றார்.