உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய அரசியல் கட்சிகளின் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட வேட்பு மனுக்களில் 9 உள்ளுராட்சி மன்றங்களுக்கானவை நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கான சபைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மனுதாரராகவும், கூட்டமைப்புக்கும் சார்பில் கூட்டமைப்பின் செயலாளர் எம். நயீமுல்லாஹ் மனுதாரராகவும் இருப்பதோடு மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பர் ஆகியோர் இந்த மனுக்கள் விசாரணையின்போது சட்டத்தரணிகளாக வாதடவுள்ளனர்.
இதேவேளை, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினருக்கு யாழ்ப்பாணத்தில் 9 வேட்பு மனுக்களும், கிளிநொச்சியில் ஒரு வேட்புமனும் ஒரேகாரணத்துக்காக நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, வன்னி தேர்தல் மாவட்டத்திலும் ஒரு வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த கட்சியின் சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு அவ்வழக்குகளை நிசாம் காரியப்பரே கையாளவுள்ளார்.
இதனைவிடவும் இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் கண்டி மாவட்ட மூன்று வேட்பு மனுகள் நிராகரிக்கப்பட்ட விடயம், நுவரெலியாவில் ஒரு வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை சம்பந்தமாகவும் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளன.

