தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

123 0
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகரிடம் இன்று செவ்வாய்க்கிழமை (25) கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணையில் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.

அதிகாரிகளை பதவி நீக்கும் 2002 5ஆம் இலக்க நடைமுறைச் சட்டத்துக்கு அமைவாக சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபரை பதவி நீக்கும் ஏற்பாடுகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளமைக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு வரின் கையெழுத்துடன் பிரேரணை ஒன்று சபாநாயகருக்கு கையளிக்க வேண்டி இருக்கிறது.அதன் பிரகாரம் குறித்த பிரேரணையை  கையளித்தோம்.

விசேடமாக விஷமத்தனமான செயற்பாடுகள், பதவியை துஷ்பிரயோகம் செய்தமை, கடமையை சரியாக செய்ய தவறியமை, பதவியில் செயற்படும்போது மிகவும் மோசமான முறையில் பக்கச்சார்பாக நடந்துகொண்டமை போன்ற விடயங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தோம்.

சபாநாயகர் இதுதொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுப்பார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக எதிர்வரும் மாதம் 8ஆம் திகதி பாராளுமன்றம் கூட இருக்கிறது. அன்றைய தினம் இந்த பிரேரணையை பாராளுமன்றத்துக்கு சபாநாயகர் சமர்ப்பிப்பார் என நாங்கள் நம்புகிறோம். பாராளுமன்றத்தில் இந்த பிரேரணையை அனுமதித்துக்கொள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை.

பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு போதுமானது. என்றாலும் தேஷபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விடயம். அதனால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரும் இந்த பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்.

பாராளுமன்றத்தில் பிரேரணை அனுமதிக்கப்பட்ட பின்னர் 3பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு, குறித்த குழுவின் அறிக்கை சபாநாயகருக்கு கையளிக்கப்பட்டதும், சபாநாயகர்அ அந்த அறிக்கையை ஜனாதிபதிக்கு கையளிப்பார். அதன் பின்னர் ஜனாதிபதி அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பார் என்றார்.

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த நீதிமன்ற உத்திரவை தேசபந்து தென்னக்கோன் அவமதித்து சுமார் 20 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த புதன்கிழமை (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதையடுத்து தேசபந்து தென்னக்கோன் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.