யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின்கலங்களை தொடர்ச்சியாக திருடிவந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் சிப்பாய் உட்பட ஐந்து பேரையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கைத்தொலைபேசி தொலைத்தொடர்பு வலையமைப்புக்களின் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு பொருத்தப்பட்டிருந்த மின் கலங்கள் தொடர்ச்சியாக களவாடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குரிய பொலிஸ் நிலையங்களில் இந்த நிறுவனங்கள் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தன.
முறைப்பாடுகளின் பிரகாரம் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நளின் தர்சனா தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், மின்கலன்களை திருடியவர்கள் அம்பாறை பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற விசேட பொலிஸ் குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை அம்பாறையில் இருந்து கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்று, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தவேளை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படை முன்னாள் சிப்பாய் என்பதும், மற்றுமொருவர் களவாடப்பட்ட மின்கலங்களை கொள்வனவு செய்தவர் என்பதும் ஏனைய மூவரும் திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளன.
சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 192 மின்கலங்களை திருடியுள்ளனர் எனவும் திருடப்பட்ட மின்கலம் ஒன்றின் பெறுமதி சுமார் ஒரு இலட்ச ரூபாவுக்கும் அதிகம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசாரணைகளின் பின்னர், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், ஐவரையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேவேளை திருடப்பட்ட மின்கலங்களை பொலிஸார் கைப்பற்றியதோடு, அவற்றை நீதிமன்றில் சான்றுப் பொருட்களாக ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

