சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கமையவே இவ்வாண்டுக்கான வரவு – செலவு திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மாறாக நாட்டிலுள்ள எந்தவொரு பிரதான பிரச்சினைக்கும் அதில் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை. முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டங்களும் எந்தளவுக்கு நடைமுறை சாத்தியமானது என்பது சந்தேகத்துக்குரியது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வரவு – செலவு திட்டத்துக்கு எதிராகவே நாம் வாக்களித்தோம். அதிலுள்ள வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது நடைமுறை சாத்தியமானதா என்பது சந்தேகத்துக்கிடமானது.
வரி வருமானம் மற்றும் கடன் பெறுவதைத் தவிர அரசாங்கத்திடம் வேறு எந்த மாற்றுத்திட்டமும் இல்லை. தொழில் வாய்ப்பின்மை உட்பட நாட்டிலுள்ள எந்தவொரு பிரதான பிரச்சினைக்கும் இந்த வரவு – செலவு திட்டத்தில் தீர்வு முன்வைக்கப்படவில்லை.
மாறாக முற்று முழுதாக சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கமையவே இந்த வரவு – செலவு திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. அரச நிர்வாகம் தொடர்பில் அரசாங்கம் இன்னும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களுக்கு பாராளுமன்றத்துக்குள் பொய் கூறும் உரிமை நீக்கப்பட வேண்டும்.
பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையாக இதற்கான யோசனையையும் முன்வைப்பதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம். கிராம மட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிக வேகமாக பலமடைந்து வருகிறது.
கடந்த காலங்களில் எம்மிலிருந்து பிரிந்தவர்கள் மீண்டும் கட்சியில் இணைகின்றனர். நாம் மக்களிடம் பொய் கூறி அவர்களை ஏமாற்றவில்லை.
நாம் ஒரே கொள்கையைப் பின்பற்றி வருகின்றோம். சந்தர்ப்பவாத அரசியலுக்காக நாம் எமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. கட்சி ஆதரவாளர்கள் தற்போது அதை புரிந்து கொண்டுள்ளனர்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஊடாக மீண்டும் கட்சியை உயர் நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது என்றார்.

