ஹட்டன் ரயில் நிலையத்தில் இருந்து நல்லத்தன்னி வரை யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற ஹட்டன் டிப்போவைச் சேர்ந்த இ.போ.ச பஸ் சாரதி ஒருவர், புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இ.போ.ச பஸ் சாரதி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு வந்த யாத்திரிகர்கள் குழுவொன்று குறித்த இ.போ.ச பஸ்ஸில் ஏறியுள்ள நிலையில் பஸ் சாரதி அதிக மதுபோதையில் இருந்ததை அவதானித்துள்ளனர்.
பின்னர், யாத்திரியர்கள், இது தொடர்பாக ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதற்கமைய ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள், சாரதியை பரிசோதித்து, அவர் குடிபோதையில் இருப்பதை உறுதி செய்து சந்தேகத்தின் பேரில் சாரதியை கைது செய்துள்ளனர்.
மேலும், ஹட்டன் டிப்போவில் இருந்து மற்றொரு சாரதி அழைத்து வரப்பட்டு, யாத்திரிகர்கள் குழுவை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

