மன்னார் மாவட்டத்தில் 4 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 38 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 8 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று (20) மாலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு நான்கு சபைகளுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டிருந்தது. மன்னார் நகர சபை, நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு பிரதேச சபைகள் உள்ளடங்களாக நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு இவ்வாறு வேட்பு மனுக்கள் கோரப்பட்டிருந்தன.
கடந்த 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுயேட்சை குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளடங்களாக 45 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.
அவற்றில் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 38 பேருடைய வேட்பு மனுக்கள் எமக்கு கிடைக்க பெற்றிருந்தது.
மன்னார் நகர சபையில் 09 கட்சிகளினதும்,ஒரு சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 10 வேட்பு மனுக்கள் கிடைக்கப்பெற்றன. முசலி பிரதேச சபைக்கு 9 கட்சிகளினதும், ஒரு சுயேட்சைக் குழு உள்ளடங்களாக 10 வேட்பு மனுக்கள் கிடைக்கப்பெற்றன.
நானாட்டான் பிரதேச சபைக்கு 7 கட்சியினதும் ஒரு சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 8 வேட்பு மனுக்கள் கிடைக்கப்பெற்றது. மாந்தை மேற்கு பிரதே சபைக்கு 9 கட்சியினதும் ஒரு சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 10 வேட்பு மனுக்கள் கிடைக்கப்பெற்றது.
முசலி பிரதேச சபைக்கு கிடைக்கப்பெற்ற 10 வேட்பு மனுக்களில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
நானாட்டான் பிரதேச சபைக்கு கிடைக்கப்பெற்ற 8 வேட்பு மனுக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு கிடைக்கப்பெற்ற 10 வேட்பு மனுக்களில் இலங்கை தமிழரசு கட்சி,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு,சிறிலங்கா தொழிலாளர் கட்சி,சர்வஜனம் அதிகாரம் ஆகிய நான்கு கட்சிகளினதும்,சுயேட்சைக்குழு ஒன்று உள்ளடங்களாக 5 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.