இலங்கை அரசியலுக்கு மகா சங்கத்தின் வழிகாட்டுதலும் அவசியம் !

96 0

இலங்கை அரசியலை சிறந்த அரசியல் கலாச்சாரத்தை நோக்கிக் கொண்டுசெல்லும் செயற்பாட்டில் மகா சங்கத்தினரின் வழிகாட்டுதலும் அவசியம் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

மெத்தக்க பொடிவெலா ஸ்ரீ சுமன ஷைலாராம விகாராதிபதி சங்கைக்குரிய வட்டலத்தே சுமங்கல தேரருக்கு, “ஸ்ரீ பண்ணாலோக”  பட்டத்துடன், விமலகீர்த்தி பெந்தர வெல்லவிட்ட கோரள மற்றும் கலு வெல்லேபட பத்துவின் “அதிகரண சங்கணாயக்க”  பட்டத்தை வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) ஸ்ரீ சுமன ஷைலாராம விகாரையில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர்களான டி.கே.ஜயசுந்தர, நிஷாந்த பெரேரா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கருணாதிலக உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அத்துடன்,  சபாநாயகர் உடுகம தொலவத்த பிரதேசத்தில் உள்ள பெருந்தோட்டதில் வசிக்கும் மலையகத் தமிழ் மக்களைச் சந்தித்து, அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிந்துகொண்டார். அப்பகுதியில் உள்ள முத்துமாரி அம்மன் கோவிலையும் அவர் தரிசனை செய்தார்.

இந்த விஜயத்தின் போது, சபாநாயகர் கன்னெலியா வன சரணாலயப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டதுடன், ஹினிதும கல்வாரி கத்தோலிக்க தேவாலயத்தில் காலி பிரதேசத்திற்கான அருட்தந்தை ரெட்மண்ட் விக்ரமசிங்கவை சந்தித்து ஆசி பெற்றார்.

தற்போதைய அரசியல் கலாச்சாரம் குறித்து தனக்கு ஒரு புரிதல் இருப்பதாகவும் பாராளுமன்றம் மூலம் அதைத் தொடர்ந்து பராமரிக்க சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அருட்தந்தை குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, கல்வாரி  தேவாலயத்தைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் குறித்தும் சபாநாயகர் கவனம் செலுத்தியிருந்தார். இலங்கையில் மத சகவாழ்வு மற்றும் இன நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான புதிய அணுகுமுறைகள் குறித்தும், அனைத்து தரப்பினரும் புரிந்துணர்வுடன் இணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.