மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்!

65 0

தொழிலின்மையால் இளைஞர், யுவதிகள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில்  வாய்ப்புகளை உருவாக்கும் செயற்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையத்தம்பி ஶ்ரீநாத் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்  கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரம்,  விளையாட்டுத்துறை அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வடக்கு மற்றும்  கிழக்கில் கடந்த கால யுத்தத்தில் இளைஞர்கள் பல்வேறு திசைகளுக்கு சென்றிருந்தனர். யுத்தம் முடிவடைந்த பின்னரும் அவர்களுக்கு வழிகாட்டல்கள் இல்லாமல், அவர்கள் வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் நிலைமை உருவாகியிருந்தது. இந்த நிலைமையை மாற்றியமைக்கும் பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு உள்ளது.

வடக்கு  மற்றும் கிழக்கை பொறுத்தவரையில் இளைஞர்களின் விளையாட்டுத்துறை மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் எதிர்கால நிச்சயமற்ற நிலைமையில் இருந்தது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வகையான விளையாட்டு வீரர்கள் உருவாகியுள்ளனர். விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் பாரிய பொறுப்பு உள்ளது.

வாகரை ,செங்கலடி, களுவாஞ்சிக்குடி,  வாழைச்சேனை உள்ளிட்ட பிரதேசங்களில் திறமான மைதானங்கள் இல்லாமையினால் தரமற்ற மைதானங்களில் திறமைகளை காட்ட வேண்டியுள்ளது. அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட கபடி அணி கேரளாவில் பாரிய வெற்றியை பெற்றுள்ளது. இவை ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்த மாவட்டத்தில் 5 விளையாட்டு   பயிற்றுவிப்பாளர்களுக்கு பற்றாக்குறைகள் காணப்படுகிறது.

பிரதேச விளையாட்டுத்துறை அதிகாரிகளுக்கும் பற்றாக்குறைகள் நிலவுகின்ற. இதனால் இங்குள்ள இளைஞர்கள் பல்வேறு வாய்ப்புகளை இழந்துள்ளனர். இந்த அரசாங்கம் இந்த மாவட்டத்திற்காக விளையாட்டுத்துறைக்காக நிதி ஒதுக்கீடுகளை செய்ய வேண்டும்.இப்பகுதியில்  வேலையில்லா பட்டதாரிகள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் செயற்திட்டங்களை உருவாக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.