2020 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பெண் ஒருவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அனுமதி வழங்கப்பட்டமையானது சட்டத்துக்கு முரணானது என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
பேலியகொடை விசேட விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்ட ஹேனகம, பொகுனுவிட்ட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
இந்தநிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தம்மைத் தடுப்பு காவலில் வைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தினூடாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி குறித்த பெண்ணினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்றைய தினம் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குறித்த தீர்மானம் சட்டத்துக்கு முரணானது என தீர்ப்பளிக்கப்பட்டதுடன், மனுதாரரான பெண்ணுக்கு அரசாங்கம் ஒரு இலட்சம் ரூபாவினை இழப்பீடாகச் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

