புதிய யாப்பு உருவாக்கத்துக்கான பணிகளை புதிதாக ஆரம்பிக்க போவதில்லை. இடைநிறுத்தப்பட்ட இடத்தில் இருந்தே பணிகளை ஆரம்பிப்போம். சிறந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே செயற்படுவோம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய அரசியலமைப்பினை நிச்சயம் உருவாக்குவோம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற அமர்வின் போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
எதிர்க்கட்சிகளை கேட்டு எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்கவில்லை. அடிப்படை பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கருத்திற் கொண்டு கொள்iகைத் திட்டத்தை தயாரித்தோம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் நிச்சயம் நிறைவேற்வோம். எமது கொள்கை திட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுத்து தயாரித்தோமே தவிர, ஆறு மாதத்துக்குள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக குறிப்பிடவில்லை.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிப்பெறுவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊழல் மோசடி தடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உட்பட அரச நிறுவனங்கள் சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் தலைமறைவாகியுள்ளார். ஏனைய அரசாங்கங்களாயின் அவர் பாதுகாக்கப்பட்டிருப்பார். குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது.
சிறந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான பணிகளை உரிள காலத்தில் நாங்கள் முன்னெடுப்போம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்.
புதிய யாப்பு உருவாக்கத்துக்கான பணிகளை புதிதாக ஆரம்பிக்க போவதில்லை. இடைநிறுத்தப்பட்ட காலத்தில் இருந்தே ஆரம்பிப்போம். ஆகவே இவ்விடயத்தில் நாங்கள் அவசரப்பட போவதில்லை. எதிர்க்கட்சிகளின் கலக்கத்துக்கு அமைய நாங்கள் செயற்பட போவதில்லை என்றார்.

