தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி ; சந்தேக நபர் கைது

61 0

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி 3 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

நபர் ஒருவர் ஈ-7 மற்றும் ஈ-8 பிரிவுகளின் கீழ் வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாக கூறி 3 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் குருணாகல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு எதிராக பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவர் நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து வந்த ஒருவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதற்கு மேலதிகமாக சந்தேக நபருக்கு எதிராக 3 வழக்குகளை தொடர்வதற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானித்துள்ளது.

இதனிடையே தென் கொரியாவில் ஈ-8 பிரிவின் கீழ் வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாக தெரிவித்து பணம் கோரும் தரப்பினரிடம் பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு பணம் அறவிடுபவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பணியகத்தின் 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் 0112 864241 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு பணியகம் மேலும் கோரியுள்ளது.