நுரையீரல் தொற்று காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குணமடைந்து வரும் போப் பிரான்சிஸின் புகைப்படத்துடன் இந்த அறிவிப்பை வத்திக்கான் வெளியிட்டுள்ளது.
போப்பின் புகைப்படத்தை வத்திக்கான் ஊடகங்களுக்குக் காண்பிப்பது இதுவே முதன்முறை என்றும் கூறப்படுகிறது.
போப் ஓரளவு குணமடைந்தாலும், அவர் நீண்ட காலம் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என்று அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் நம்புகின்றனர்.
போப் பிரான்சிஸ் (88) மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த மாதம் 14ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு ஆண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில், அவரது சிறுநீரகங்கள் லேசான பாதிப்புக்குள்ளாகியிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், போப் பிரான்சிஸ் குணமடைந்து வருவதாக கூறி, வத்திக்கான் புகைப்படத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

