உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் கால அவகாசம் நீடிப்பு

93 0

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விரும்பும் அரச ஊழியர்களின்  விண்ணப்பங்கள் மார்ச் 03 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படும் தபால்களில் ஏற்படக்கூடிய காலதாமதங்களையும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலம் எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த காலதாமதங்களை தவிர்ப்பதற்கு தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஒவ்வொரு மாவட்ட வாரியாக வேறு பிரித்து வெவ்வேறு கடித உறைகளில் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஒப்படைப்பது மிகவும் உகந்தது எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு (www.election.gov.lk) பிரவேசிக்கவும்.